காதலருடன் கசமுசா.. கையும் களவுமாக சிக்கிய சித்ரா.. அடித்தே கொல்லப்பட்ட சந்திரன்!

Su.tha Arivalagan
Jan 21, 2023,09:22 AM IST
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் பகுதியில் கள்ளக்காதலருடன் தனிமையில் இருந்தபோது அவரது கணவரிடம் சிக்கிக் கொண்டார் 26 வயதுப் பெண். இதையடுத்து நடந்த மோதலில் அப்பெண்ணும், கள்ளக்காதலரும் சேர்ந்து கணவரை அடித்தே கொன்று விட்டனர்.



திருக்கழுக்குன்றம் அருகே உள்ளது வெள்ளைப்பந்தல் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் துர்நாற்றம் வீசவே கிராமத்து மக்கள் என்னவென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு மனித எலும்புக் கூட அரையும் குறையுமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஏரிக்கரைக்கு அருகே ஒரு நாடோடிக் குடும்பம் முகாமிட்டிருந்தது. ஆனால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் குதித்தனர்.

மாயமாகி விட்ட அந்தக் குடும்பத்தைத் தேடினர். இதில் அக்குடும்பத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் சிக்கினார். 26 வயதான சித்ராவிடம் விசாரித்தபோது, அவர்தான் தனது கணவரைக் கொன்று விட்டு கள்ளக்காதலருடன் தப்பியது தெரிய வந்தது.

சித்ராவுக்கும், அவரது கணவர்  சந்திரனுக்கும் (35 வயது) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். வெள்ளைப்பந்தல் கிராமத்தில் முகாமிட்டு கிடைத்த வேலையைச் செய்து வந்துள்ளனர். சித்ரா  ஒரு விவசாயத் தோட்டத்தில் வேலை பார்த்தார். அப்போது அவருக்கும், உடன் வேலை பார்த்த சக்திவேல் என்பவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று சித்ராவும், சக்திவேலுவும் தனிமையில் இருந்தபோது சந்திரன் அவர்களைக் கையும் களவுமாக பிடித்து விட்டார். ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதைப் பார்த்த சக்திவேல் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் தாக்கியுள்ளார் சந்திரன். இதனால் கோபமடைந்த சக்திவேல், சந்திரனை பதிலுக்குத் தாக்கியுள்ளார். அவருடன் சித்ராவும் சேர்ந்து கொண்டார். இருவரும் சேர்ந்து கட்டையை எடுத்து சந்திரனை சரமாரியாக தாக்கவே அவர் இறந்து போனார்.

சந்திரன் இறந்து விட்டதை அறிந்த அவர்கள் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள புதரில் சந்திரனின் உடலை வீசி விட்டு குழந்தையுடன் தலைமறைவானார்கள். சித்ரா கொடுத்த தகவலின் பேரில் சக்திவேலையும் போலீஸார் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.