அப்பப்பப்பா என்னா வெயில் டா.. வெயிலுக்கு இதமா.. திருட போன இடத்தில.. ஏசியை போட்டு தூங்கிய திருடன்!

Manjula Devi
Jun 03, 2024,03:22 PM IST

லக்னோ: வடமாநிலங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திருட சென்ற வீட்டில் ஏசியை போட்டு தூங்கிய திருடனை போலீசார் அலேக்காக தூக்கி சென்றுள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் பாண்டே. இவர் அதே பகுதியில் பல்ராம் மருத்துவமனையில் பணியாற்றியும் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டே வேலை காரணமாக வாரணாசிக்கு சென்றிருந்தார்.

அந்த சமயம் கபில் என்ற திருடன் அப்பகுதியில் நோட்டமிட்டு வந்திருக்கிறான். டாக்டர் வீடு பூட்டிக் கிடப்பதை பார்த்த திருடன் இரவு மது அருந்திவிட்டு யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குள் நைசாக நுழைந்தான். 


என்ன என்ன ஐட்டங்களோ!




அங்கு கண்ணில் தென்பட்ட பொருட்களை எல்லாம் வாரிசுருட்டிக்கொண்டு செல்ல திட்டமிட்டான். வடிவேலு ஒரு படத்தில் வந்து வீடு முழுக்க பார்த்துப் பார்த்து பொருட்களை எடுப்பாரே.. அதேபோல கபிலும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டான். வீட்டுக்குள் ஒரே வெக்கையாக இருந்துள்ளது. இதனால் கபிலுக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது. 


என்ன இது இப்படி வேர்க்குதே என்று கடுப்பான கபில், அங்கிருந்த ஏசியை போட்டுள்ளான். ஏசியில் இருந்து குளிர்ந்த காற்று வீசவே அப்படியே மெய் மறந்து கொஞ்சம் ஆயாசமாக அமர்ந்த கபிலுக்கு, போதையின் தாக்கமும் கூடச் சேர்ந்து கொள்ள அப்படியே ஆழ்ந்த தூக்கம் வந்து விட்டது.  செம தூக்கம்.. விடிஞ்சும் கூட தூக்கம் கலையலை கபிலுக்கு!


தூங்காதே தம்பி தூங்காதே!


மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் மருத்துவர் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்கள் மெதுவாக வீட்டிற்குள் சென்று எட்டிப் பார்த்தனர். அப்போது அங்கு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்ததோடு, திருடன் திருடிய பொருட்களை எல்லாம் தன் அருகில் வைத்துக் கொண்டு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார்கள். உடனே வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டனர்.


காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.  இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மெதுவாக வீட்டிற்குள் நுழைந்து திருடனை தட்டி, தம்பி தூங்குனது போதும்.. வா ஸ்டேஷனுக்குப் போலாம் என்று கூறி அழைத்துச் சென்றனர். ஒரு திகில் திருடன் கடைசியில் காமெடி திருடனாக மாறிய கதை அந்த ஊரில் கலகலப்பை ஏற்படுத்தியது.


திருடப் போற இடத்துல திருடிட்டு போய்ரணும்.. அங்க போய் ஏசி போட்டு தூங்குவது, முட்டையில் ஆம்லேட் போட்டு சாப்பிடுவது என்று சைடு வேலையில் ஈடுபட்டு வேலையில் கவனம் போய், இப்படி ஏடாகூடமாக மாட்டிக்  கொள்ளும் திருடர்கள் அதிகரித்து வருகிறார்கள்.. என்பது குறிப்பிடத்தக்கது.