ராமர் கோவில் திறப்பு.. ஜனவரி 22ம் தேதி யார் யாருக்கெல்லாம் லீவ்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Aadmika
Jan 21, 2024,03:12 PM IST

டில்லி : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் சிலவும் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.


அயோத்தி ராமர் கோவில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள், நிதித்துறை நிறுவனங்கள், மண்டல கிராமப்பு வங்கிகள் ஆகியவற்றிற்கு ஜனவரி 22ம் தேதியன்று அரை நாள் விடுமுறை விடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்திருந்தது. 


அதோடு மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பகல் 02.30 வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 




அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிதித்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கும் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 


மத்திய அரசே இப்படி ஒரு உத்தரவை வெளியிட்டு விட்டதால் டில்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தனது விடுமுறை உத்தரவை வாபஸ் பெற்று விட்டது.


ஏற்கனவே இறைச்சிக்கடைகள், மதுக்கடைகள் ஜனவரி 22ம் தேதி மூடப்பட வேண்டும் என பல மாநிலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் துறை வங்கிகளான ஹச்டிஎஃப்சி, ஆக்சிஸ் போன்ற வங்கிகளும் ஜனவரி 22ம் தேதியன்று மூடப்படுவதாக அறிவித்துள்ளன. 


ஏற்கனவே ஜனவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநில அரசு விடுமுறைகள் வேறு இருக்கும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் காரணமாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.