வெள்ளம் பாதித்த பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்படாது.. அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

Meenakshi
Dec 18, 2023,04:58 PM IST

தூத்துக்குடி: கனமழையால் தென்மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் பால் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளதால் பால் தட்டுப்பாடு ஏற்படாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 


பொதுமக்களுக்கு  தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை செய்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர்களை நேரடியாக கலத்திற்கு  அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 




இந்நிலையில் வெள்ளம் பாதிப்புக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தேவையான அளவிற்கு கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.


கூடுதல் கையிருப்பு வைப்பதற்காக ஈரோடு, அம்மாபாளையம், சேலம், அம்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து 20 மெட்ரிக் டன் பால் பவுடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் எந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் விநியோகிக்கப்பட அந்தந்த மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.