ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில்.. தங்க, வைர நகைகள் திருட்டு.. யார் கைவரிசை?

Baluchamy
Mar 20, 2023,03:51 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த வைரங்கள் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்தமகள் ஐஸ்வர்யா. 2012 ஆம் ஆண்டு தனது கணவர் நடிகர் தனுஷை வைத்து '3' படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம ஹாட் ஆனது. குறிப்பாக 'why this kolaveri' பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனது. தனது முதல் படம் ஹிட்டான சந்தோஷத்தில் தொடர்ந்து வை ராஜா வை, சினிமா வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். 


சினிமா வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருந்த நிலையில் "யார் கண்ணு பட்டுச்சோ" என சொல்வது போல் நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.




ஐஸ்வர்யா தனது இரு மகன்களுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனியாக வசித்து வருகிறார். மேலும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யாவின் வீட்டில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான வைரங்கள் மற்றும் தங்க நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், என் வீட்டில் பணிபுரியும் பணியாட்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் குறிப்பிட்டுள்ளார். தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.