"ஓடிடி"யால் பொழப்பு போச்சு.. தியேட்டர்களை மூடப் போகிறோம்.. உரிமையாளர்கள் திடீர் எச்சரிக்கை!

Meenakshi
Feb 20, 2024,03:37 PM IST

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகவும், அரசு ஒத்துழைப்பு தராவிட்டால் தியேட்டர்களை மூட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள்.


தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. 




இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தியேட்டர்களை மூடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறியுள்ளதாவது:


- ஓடிடியில் படம் வெளியாகி 8 வாரம் கழித்து தான் வெளியிட வேண்டும். தற்போது 2 வாரங்களிலேயே படம் வெளயாகி விடுவதால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.




- உள்ளூர் பொழுதுபோக்கு 8% வரியை நீக்க வேண்டும். இந்த வரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை.


- திரையரங்க பராமரிப்பு கட்டணத்தை (maintenance) உயர்த்த வேண்டும். ஏ சி தியேட்டர் ரூ. 10, non AC தியேட்டர் ரூ. 5 என நிர்ணயம் செய்ய வேண்டும். 


-  திரைப்படங்களுக்காண share தொகைத் தற்போது அதிகமாக உள்ளது. எனவே வரும் 1ம் தேதிக்கு மேல் 60% சதவீதம் அதிகமாக கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளோம். 




- கிரிக்கெட் உள்ளிட்ட  விளையாட்டு போட்டிகளையும் திரையிட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.  விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.


இப்படித்தான் கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஓடிடி வெளியீட்டுக் காலத்தை அதிகரிக்காவிட்டால் கேரளாவில் மலையாளப் படங்களை திரையிட மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.