உலகிலேயே உயரமான நாய் ஜீயஸ்.. கேன்சர் வந்து மரணம்!

Su.tha Arivalagan
Sep 15, 2023,04:44 PM IST

டெக்சாஸ்:  உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்த ஜீயஸ் நாய் எலும்புப் புற்றுநோய்க்குப் பலியாகியுள்ளது.


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் பெட்போர்ட் நகரைச் சேர்ந்தவர் பிரிட்டானி டேவிஸ். இவரது வீட்டில்தான் ஜீயஸ் நாய் வாழ்ந்து வந்தது. தி கிரேட் டேன் வகை நாயாகும் இது. மிகவும் உயரமாக பார்க்கவே கம்பீரமாக இருக்கும். இதன் உயரம் 1.046 மீட்டராகும். அதாவது 3 அடி 5 அங்குலமாகும். அந்த அளவுக்கு உயரமான நாய் இது.




இந்த நாயின் உயரம் காரணமாக உலகிலேயே உயரமான நாய் என்று கின்னஸ் சாதனையும் படைத்திருந்தது. இந்த நாய்க்கு எலும்புப் புற்றுநோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் வலது கால் கூட சமீபத்தில் நோய் பாதிப்பு காரணமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


நீண்ட காலமாக போராடி வந்த ஜீயஸ் நாய் செப்டம்பர் 12ம் தேதி மரணமடைந்து விட்டது. இதுகுறித்த தகவலை பிரிட்டானி டேவிஸ் வெளியிட்டுள்ளார்.  ஜீயஸுடன் இருந்த நாட்கள் மிகவும் அருமையானது. அதற்காக மகிழ்கிறோம். பலரையும் ஜீயஸ் மகிழ்வித்தது. நிச்சயம் அதை நாங்கள் மிஸ் செய்வோம்.  அதன் புற்றுநோய்க்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்தோம். ஆனால் அதன் உடல் நலன் சிகிச்சையை ஏற்கவில்லை. மரணத்தைத் தழுவி விட்டது ஜீயஸ் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் பிரிட்டானி.


மரணமடைந்த ஜீயஸ் நாய்க்கு வயது 3 என்பது குறிப்பிடத்தக்கது.