நம்பர் பிளேட்டில்.. தனிநபர் அடையாளத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டக் கூடாது.. இன்று முதல் அமல்!

Manjula Devi
May 02, 2024,12:33 PM IST

சென்னை:  சென்னையில் இயக்கப்படும் வாகனங்களில் மருத்துவர், வழக்கறிஞர், ஊடகங்கள் காவல்துறை என தனிநபர் அதிகாரத்தை குறிக்கும் தேவையில்லாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என ஏற்கனவே சென்னை  போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


சென்னையில் இயக்கப்படும் வாகனங்களில் மருத்துவர், காவல்துறையினர், ஊடகம், வழக்கறிஞர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் தனிநபரின் அடையாளத்தைக் குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இந்த நிலையில்  தனி நபர்கள் அடையாளத்தைக் குறிக்கும்  ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்டக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வாகனங்களில் தனிநபரின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதால், அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த  வண்ணம் உள்ளன.




இந்த புகாரின் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி யார் யார்  ஸ்டிக்கர் ஒட்டலாம்.. யார் யார் ஒட்டக்கூடாது.. என்பது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்களில் தனிநபர் அடையாளத்தை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்டக்கூடாது. நம்பர் பிளேட்டை தவிர அதிகாரத்தை குறிக்கும்  எந்த ஸ்டிக்கர்களும் இடம்பெற கூடாது. குறிப்பாக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. மருத்துவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வாசகங்கள் பயன்படுத்தி மருத்துவர் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது. 


வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகத்தினர் ஆகியோர் வாகனங்களில் தேவையில்லாத ஸ்டிக்கர் ஒட்டாமல் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.


மேலும் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் எனவும், தனியார் வாகனங்களில் அந்தந்த நிறுவனங்களின் பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் இடம்பெறலாம் எனவும் , வாடகை வாகனங்கள், டிராவல்ஸ் வாகனங்கள் ஆகியவற்றில் அந்தந்த நிறுவனங்களின் பெயர்கள் ஒட்டிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.


 வாகனங்களில் தனிநபர் அடையாளத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்டக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.இதனை மீறி ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன  சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.


மேலும் முதல் முறையாக விதியை மீறினால் 500 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக விதியை மீறினால் ரூபாய் 1500 அபராதம் விதிக்கப்படும். நம்பர் பிளேட் அல்லாத வாகனத்தின் பிறப்பகுதிகளில் ஸ்டிக்கர் ஒட்டினாலும் ரூபாய் 1000 ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.