2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: நாளை நாடாளுமன்றம் கூடுகிறது.. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Manjula Devi
Jan 30, 2024,06:04 PM IST

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். 


நாடாளுமன்ற லோக்சபாவில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தற்போதைய மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது.


ஒவ்வொரு வருடமும் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றி தொடங்கி வைப்பார். அந்த வகையில் நாளை தொடங்கவுள்ள கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார்.  இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 




கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தருவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 


இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், தேர்தல் காலம் என்பதால் ஏதாவது முக்கியமான அறிவிப்புக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


பலத்த பாதுகாப்பு


கடந்த மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்திற்குள் சில இளைஞர்கள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தினர். லோக்சபாவுக்குள் இரண்டு பேர் புகுந்து வண்ணக் குண்டுகளை வீசி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.


நாடாளுமன்றத்தில் நடந்த இந்த அத்துமீறலை அடுத்து, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்திற்காக  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.