மதுரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பெயர் சூட்டியது தமிழக அரசு.. என்ன தெரியுமா?

Meenakshi
Jan 12, 2024,06:03 PM IST

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். அதிலும் மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  அந்த வகையில்  இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 16ம் தேதி பாலமேட்டிலும் , ஜனவரி 17ம் தேதி புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.


இத்தகைய சிறப்பு மிக்க போட்டிகளை நடத்துவதற்கு சரியான இடம் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. தற்போது சட்டரீதியாக ஜல்லிக்கட்டுக்கு உரிய அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் கொடுத்து விட்டது. இதனால் கடந்த 2 ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன.




இந்த போராட்டத்திற்கு பின் நேரடியாக போட்டியை காண தமிழக மட்டுமின்றி வட மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் அலங்காநல்லூருக்கு பார்வையாளர்கள் வருவது அதிகரித்து. இதனால் அவர்கள் அமர்ந்து போட்டியை பார்க்க அலங்காநல்லூரில் போதிய வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் ஏமாறும் நிலை ஏற்பட்டது.


இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு என்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ஏற்றது திமுக அரசு. சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு  அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.


66.8 ஏக்கரில், ரூபாய் 44 கோடியில், ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டியை போல் 10,000 பேர் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது, காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்கள் தேவையான அனைத்து வசதிகளும் இந்த அரங்கில் செய்யப்பட்டுள்ளன. தரைதளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடு பிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனை கூடம், முதல் உதவி கூடம், பத்திரிக்கையாளர் கூடம்,  காளைகள் பதிவு செய்யும் இடம்,  பொருட்கள் பாதுகாப்பு அறைகள் துகியவை  இடம்பெற்றுள்ளன.


முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அறைகளும், உணவு மற்றும் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம்  போலவும், உட்புறத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் போலவும் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த பிரம்மாண்டமான அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை ஜனவரி 23ம் தேதி முதல்வர் மு.க..ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அடுத்த ஆண்டு முதல் இங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதி தமிழர்கள் வைத்த பெயர் ஏறு தழுவுதல். அந்தப் பெயரிலேயே தற்போது ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.