வெயிலை சமாளிக்க தயாராகுங்க மக்களே.. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெயில் சுட்டெரிக்குமாம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்கள் அதிக வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டிலும் வரும் நாட்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்று சுழற்சி மாலத்தீவு கடற்கரை பகுதியில் நகர்ந்தது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வந்தது. இதற்கிடையே இந்த காற்று சுழற்சி அகன்று செல்வதால் வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவல் தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இதனால் கர்நாடக பகுதிகளில் வறண்ட கிழக்கு காற்று ஊடுருவி இருப்பதால் கடல் காற்றின் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டு வருகிறது.
இதன் காரணமாக, கர்நாடக மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்திலேயே அனல் காற்று வீசும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கார்வார் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 4.6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயரக்கூடும். இதனால் பொதுமக்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கர்நாடகா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரக்கூடிய நாட்களில் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.