மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை.. நடந்தது என்ன.. அதிர வைக்கும் FIR

Su.tha Arivalagan
Jul 21, 2023,11:34 AM IST
இம்பால்: மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த வீடியோ தொடர்பாக மணிப்பூர் போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் அடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

மே 4ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் ஒரு கும்பல் பனாயிம் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை எரித்தும், உடைத்தும் சூறையாடியது. அந்த வன்முறையிலிருந்து தப்பித்த ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் காட்டுக்குள் தஞ்சம் புகுந்தது. பின்னர் அவர்களை போலீஸார் மீட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த நிலையில் வழியில் கிட்டத்தட்ட 800 முதல் 1000 ஆண்கள் அடங்கிய கும்பல் போலீஸாரை வழிமறித்து அந்த குடும்பத்தினரை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர். வழி முழுவதும் அந்தக் குடும்பத்த��னரை அக்கும்பல் கொடூரமாக தாக்கியது. அதில் 56 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அந்தக் குடும்பத்தில் இருந்த 3 பெண்களையும் நிர்வாணப்படுத்தி அட்டூழியம் செய்துள்ளனர் அந்த வெறி பிடித்த ஆண்கள். அதில் 21 வயதேயான இளம் பெண்ணை கூட்டு பலாத்காரமும் செய்துள்ளனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற அந்தப் பெண்ணின் தம்பியை அடித்தே கொன்று விட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கங்போக்பி மாவட்டம் சைகுல் காவல் நிலையத்தில் ஊர் நாட்டாமை புகார் கொடுத்ததன் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. தற்போது வீடியோ வெளியான பிறகுதான் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் ஆளுநர் அனுசுயா ஊக்கே கடும் கோபமடைந்துள்ளார். மணிப்பூர் டிஜிபிக்கு போன் போட்ட அவர், ஏன் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கோபத்துடன் கேட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் பலத்த மெத்தனத்தில் இருந்துள்ளனர் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.