சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

Meenakshi
Oct 24, 2024,04:24 PM IST

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் கடற்கரையில், போலீஸாரிடம் நள்ளிரவில் அத்துமீறிய விவகாரத்தில் கைதான சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோரில், தனலட்சுமி ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.


சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரினுள் இருந்த தம்பதிகளிடம் நீங்கள் யார் சார் என போலீசார் கேட்டு, காரை எடுக்கச் சொல்லியுள்ளனர். அவர்கள் காரை எடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். ஆண் மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணும் அடாவடியாக நடந்து கொண்டதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிடவா என்றும் அந்த ஆண் சவால் விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.




அவர்கள் பேசியதை ரோந்து போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர். இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்படி இவர்களை போலீஸார் கைது செய்யாமல் விட்டனர் . துணை முதல்வரின் பெயரை சர்வ சாதாரணமாக இவர்கள் பயன்படுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் பலர் கொதிப்புடன் கேட்டனர். 


இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் இந்த தம்பதி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்த ஜோடி தலைமறைவாகி விட்டது. வேளச்சேரியில் ஒரு லாட்ஜில் அரை எடுத்துத் தங்கிய நிலையில், போலீஸார் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடந்தினர். விசாரணையில் இவர்களது பெயர் சந்திரமோகன், தனலட்சுமி என்றும், இவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல எனறும் பல வருடமாக காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் தெரிய வந்தது. சந்திரமோகன்  வேளச்சேரியைச் சேர்ந்தவர். தனலட்சுமி மயிலாப்பூர். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.


இந்நிலையில், தனலட்சுமி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், தான் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், தன் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவறுக்கு மன்னிப்பு கோரியதாகவும் மனுவில் தனலட்சுமி முறையிட்டிருந்தார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்