புதுமனை புகுவிழா நடைபெறவிருந்த நிலையில்.. 3 மாடிக் கட்டடம்.. தொப்புன்னு உடைஞ்சு.. பக்குன்னு இருக்கு!

Meenakshi
Jan 22, 2024,05:57 PM IST

புதுச்சேரி: பிப்ரவரி 1ம் தேதி புதுமனை புகுவிழா காண தயாராக இருந்த கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதது பார்க்கவே சோகமாக இருந்தது.


புதுச்சேரி உப்பளம், ஆட்டுப்பட்டி பகுதியில்  உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி.  கணவனை இழந்த இவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் வாழ்ந்து வருகிறார். சாவித்திரிக்கு அப்பகுதியில் வழங்கபட்ட மனை பட்டாவில் 3 அடுக்கு மாடி கட்டிருந்தார். வருகிற பிப்ரவரி 1ம் தேதி அந்த கட்டிடத்தில் புதுமனை புகு விழா நடத்த திட்டமிட்டு இருந்தார்.


இந்நிலையில், சாவித்திரி வீட்டின் பின்பகுதியில் உப்பனாரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில்  தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாவித்திரி வீட்டின் அருகே பொக்லைன் கொண்டு இடிக்கும் போது வீட்டில் விரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே வீடு அடியோடு சாய்ந்து விழுந்தது. புது வீடு என்பதால் வீட்டில் யாரும் இல்லை. 




நல்ல வேளையாக இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு சரிந்து விழுந்த இடத்தில் பார்வையிட்டனர். பின்னர் வீடு இழந்தவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். அதன் பின்னர் பொது மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். 


கஷ்டப்பட்டு கட்டிய வீடு அப்படியே சரிந்து விழுந்து நொறுங்கிப் போனதைப் பார்த்து வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Watch