Sunday Message: குடும்பத்தின் அஸ்திவாரம் தேவ அன்பு!

Su.tha Arivalagan
Feb 05, 2023,12:54 PM IST
- கோல்டுவின் ஆசிர்

ஐரோப்பாவின் பிரபலமான ஒரு நகரத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று நவநாகரீக முறையில் கட்டப்பட்டு மிக நேர்த்தியாக காணப்பட்டது. ஆனால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் அரசாங்கத்தினரால் முத்திரை போடப்பட்டிருந்தது. காரணம் அந்த கட்டிடத்தை கட்டி எழுப்ப ஆரம்பிக்கும் போது ஒருவர் வாங்கிய லஞ்சத்தின் விளைவாக மிக மோசமாக அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள். 

அஸ்திவாரம் உறுதியாக இருக்கிறதா என்று கவனிக்காத பொறியாளர்கள் அதின் மேல் வேகமாக மிக அழகாக கட்டிடத்தை கட்டி எழுப்பிவிட்டனர். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே கட்டிடம் ஆட்டம் கண்டது. அதற்கு காரணம் அதைப் பொறுப்பெடுத்து செய்தவர்களுக்கு உத்தம குணம் இல்லை. தங்கள் உண்மை தன்மையை லஞ்சத்திற்கு விற்று விட்டார்கள். எவ்வளவு பணம் செலவழித்து என்ன பயன்.



அன்பானவர்களே சரியான குடும்ப உறவுகளை கட்டி எழுப்புவதற்கு சரியான அஸ்திவாரம் வேண்டும். அவை கணவன் மனைவியிடம் அன்பு செலுத்துவதும், மனைவி கணவனுக்கு கீழ்படிவதும், பிள்ளைகள் பெற்றோர்க்கு கீழ்படிவதும், பெற்றோர் பிள்ளைகளை கோபமூட்டாதிருப்பதும் ஆகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி உறவுகளை கெடுக்கும் நிறைய நவின காரியங்கள் உண்டு. அதில் கவனமாக இருந்து குடும்ப அன்பை வளர்க்க வேண்டும். ஆகாத சம்பாஷனைகள் குடும்ப உறவை அதிகமாக கெடுக்கும். இதனால் குடும்பத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும். 

ஆகவே குடும்ப உறவில் ஒவ்வொருவரும் வேத வாசிப்பு, ஜெபம் என்று தேவனுடைய வழி நடத்துதலோடு அன்பிலே கட்டப்பட்டு மாதிரியுள்ள குடும்பமாக கட்டி எழுப்புவோம். 

"தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது".  2 தீமோத்தேயு 2 : 19