பொள்ளாச்சியில் 9வது பலூன் திருவிழா.. கலக்கல் மற்றும் கலர் புல்லாக.. குட்டீஸ்கள் ஹேப்பிண்ணோவ்!

Meenakshi
Jan 13, 2024,12:36 PM IST

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 9வது பலூன் திருவிழா தொடங்கியுள்ளது.


தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் சர்வதேச பலூன்  திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 9வது பலூன் திருவிழா தற்போது தொடங்கியது. இத்திருவிழா பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெற்று வருகிறது.


பிரான்ஸ்,ஜெர்மனி, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹாட் ஏர் பலூன்கள் மூலம் நடத்தப்படும் இந்த பலூன் திருவிழா இந்தியாவிலேயே பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 




இத்திருவிழாவில் 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. ராட்சச பலூன்களில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் தவளை, யானை, மிக்கிமவுஸ் போன்ற பல வடிவங்களில் உருவம் கொண்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.


இந்த பலூன் திருவிழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலா துறை சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. பல வண்ணங்களில் வானில் பலூன்கள் பறப்பதைக் காண மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 



பலூனில் ஏறிப் பயணிக்க கட்டணமாக ஒரு நபருக்கு 1500 வசூலிக்கப்படுகிறதாம். இந்த பலூன் திருவிழாவைக் காண வரும் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குட்டீஸ்களும் கூட செம ஹேப்பியாக பலூன்களில் பயணித்து மகிழ்கின்றனர்.