சமூக நீதி பகலவன் பெரியார்.. 145வது பிறந்த நாள்.. கொண்டாடும் தமிழ்நாடு

Su.tha Arivalagan
Sep 17, 2023,11:06 AM IST

சென்னை: சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனது கடைசி மூச்சு வரை போராடி வந்த தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.




ஈரோட்டு வெண்தாடிக் கிழவர் பெரியார் விதைத்துச் சென்ற தத்துவம் இன்று வரை வேர் பிடித்து இறுக்கமாக தமிழ்நாட்டை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சமத்துவத்திற்காகவும், பெண் கல்விக்காகவும், பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இறுதி வரை போராடியவர் பெரியார் எனப்படும் ஈவே ராமசாமி நாயக்கர்.


மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பெரியார் பின்னர் தீவிர கடவுள் மறுப்பாளராக மாறினார். மக்களிடையே நிலவி வந்த அறியாமையை கண்டு வெகுண்ட அவர், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள், முட்டாளக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து வேதனைக்குள்ளாகி அதற்கு எதிராக போராட ஆரம்பித்தார்.




அவரது எளிமையான, வெளிப்படையான, ஆணித்தரமான பேச்சுக்கள் மக்களைக் கவர ஆரம்பித்தன. அவர் பின்னால் பெரும் கூட்டம் அணி திரள ஆரம்பித்தது. 


ஆரம்பத்தில் காங்கிரஸில் இணைந்து செயல்பட்ட அவர் பின்னர் அக்கட்சியின் கொள்கைகள் சில பிடிக்காததால், அதிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார். பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.  அதில் முக்கியமானது கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் அவர் நடத்திய போராட்டம். தேசிய அளவில் அது பேசு பொருளானது.




கருத்துக்களில் வேறுபட்டாலும் கூட அனைத்துத் தலைவர்களுடனும் நல்ல நட்பு பாராட்டினார். ராஜாஜி, காமராஜர் என அனைத்துத் தலைவர்களுடனும் நட்பு பாராட்டினார். காமராஜர் மறைந்தபோது தமிழ்நாடு தன்னுடைய தலைவனை இழந்து விட்டதாக வேதனைப்பட்டார். பெரியாரின் இயக்கங்களில் முக்கியமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட இயக்கம்தான்.


பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் கூடி உருவாக்கிய நீதிக்கட்சி பின்னர் திராவிடர் கழகமாக மாறியது. இதுதான் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்கள் வலுப்பெறவும், நிலைத்து நிற்கவும் ஆரம்பப் புள்ளியாகும். திராவிடர் கழகம் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் வலுவாக இருக்கிறது. பல்வேறு திராவிடக் கட்சிகளின் பாடசாலையாகவும் மாறி நிற்கிறது.




சமூக நீதிப் பகலவனாக வலம் வந்த பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பை அவரது பிரதான சிஷ்யரான அண்ணாதுரை முதல்வரான போன நிறைவேற்ற ஆரம்பித்தார். அவருக்குப் பின்னால் அண்ணாவின் சிஷ்யரான கருணாநிதி தொடர்ந்தார். பெரியாரின் பல கனவுகளை நிறைவேற்றியவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. இன்று அவரது வழித்தோன்றலான மு.க.ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற மிகப் பெரும் கனவை நிறைவேற்றி புதிய வரலாறு படைத்துள்ளார்.


பெரியாரின் தத்துவம் இன்று வரை பலருக்கும் மிரட்சியைத் தருவதே பெரியார் என்ற சகாப்தத்தின் வாழ்நாள் சாதனையாகும். தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளை திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் இன்று கொண்டாடி வருகின்றனர்.