விஜய் அரசியல் பிரவேசத்தின் அடுத்த படி..  மாணவர்களை படிக்க வைக்க "தளபதி விஜய் நூலகம்"!

Meenakshi
Nov 17, 2023,06:49 PM IST

சென்னை: விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் அடுத்த படி ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில்  "தளபதி விஜய் நூலகம்" நாளை தொடங்கப்படுகிறது. 


சினிமாவில் பிசியாக இருந்து வரும் விஜய், மக்கள் இயக்கம் மூலமாக சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவது குறித்த சந்தேகங்கள் அனைத்தும் தற்பொழுது விலகி விட்டது. விஜய் 2026ல் அரசியலுக்கு வருவதையும் அவரே லியோ பட வெற்றி விழாவில் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி உறுதி செய்து விட்டார். 


இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:




நடிகர் விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதிவிஜய் நூலகம் தொடங்கப்படவுள்ளது. மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக தளபதி விஜய் நூலகம் திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) தொடங்கப்படுகிறது.


நாளை காலை 10.35 மணியளவில்  செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில்  அகில இந்திய பொதுச் செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைக்கிறார்.


அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில்  தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை துவக்கி வைக்கிறார். 


அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது. 


இரண்டாம் கட்டமாக வருகின்ற 23/11/2023 வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு  கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது என்பதனை அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


படி.. கற்பி.. புரட்சி செய்.. என்ற அம்பேத்கர் பாணி வழியை விஜய் கையில் எடுப்பது போல தெரிகிறது. பார்க்கலாம், விஜய் பாணி அரசியல் எப்படி இருக்கும் என்பதை.