தளபதி 69.. அதிரடி அரசியல் படம்.. வெளியானது அறிவிப்பு.. 2025 அக்டோபரில் படம் ரிலீஸ்!

Su.tha Arivalagan
Sep 14, 2024,05:17 PM IST

சென்னை:  நடிகர் விஜய்யின் 69வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஹெச் வினோத் இயக்குகிறார்.


நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் அதிரடியாக ஓடி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக கோட் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.




அதன்படி விஜய்யின் கடைசிப் படமாக கருதப்படும் தளபதி 69 படத்தை பெங்களூரைச் சேர்ந்த கே.வி.என் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் லோஹித் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர். லியோ மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களின் இணைத் தயாரிப்பாளராக இருந்தவர் ஜெகதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். 


விஜய்யுடன் அதிரடி இசையமப்பாளர் அனிருத் 5வது முறையாக கை கோர்க்கிறார். இதற்கு முன்பு, கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ படங்களுக்கு இசையமைத்திருந்தார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.  இரு பெரும் நடிகர்களான விஜய், அஜீத்தை எடுத்துக் கொண்டால், விஜய் படங்களுக்குத்தான் அதிக அளவில் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் கடைசிப் படம்  என்பதால் இந்தப் படத்தில் இசை தெறிக்க விடும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.




இப்படம் குறித்த அறிவிப்பை இன்று பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதம் 2025ல் படம் திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை விட முக்கியமாக டார்ச்பியரர் ஆப் டெமாக்ரசி என்ற தலைப்பையும் அறிவிப்பு போஸ்டரில் இடம் பெற வைத்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது அதிரடியான அரசியல் படமாக அல்லது மக்கள் போராட்டத்தைக் களமாக கொண்ட படமாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஹெச் வினோத் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதே போல விஜய்யின் இந்தப் புதிய படத்தையும் அதிரடியாக வினோத் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமாக இது கருதப்படுவதால் ரசிகர்களிடையே இப்போதே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இதை மிகப் பெரிய ஹிட்டாக மாற்ற வேண்டும் என்ற வேகத்தில் ரசிகர்கள் காத்திருப்பைத் தொடங்கி விட்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்