ஆளுநரை விடுங்க.. உங்க வேலையை ஒழுங்கா செய்றீங்களா.. பா. ரஞ்சித்துக்கு தடா பெரியசாமி கேள்வி!

Su.tha Arivalagan
Apr 08, 2023,11:07 AM IST
சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி தனது வேலையைத் தவிர எல்லா வேலையையும் செய்வதாக கூறியுள்ளார் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் நான் கேட்பது, அவர் தனது வேலையை முதலில் ஒழுங்காக செய்கிறாரா என்று பாஜகவைச் சேர்ந்த தடா பெரியசாமி கேட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் வேலையை விட்டு விட்டு மற்ற வேலைகளையெல்லாம் ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பாக செய்கிரார். ஸ்டெர்லைட், கூடங்குளம் போராட்டத்திற்குப் பணம் வருகிறது என்று எதன் அடிப்படையில் அவர் கூறினார் என்று தெரியவில்லை. அவர் பேசியது தவறு என்று கூறியிருந்தார்.



இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலித் பிரிவு தலைவரும், மூத்த தலித் தலைவரும், முன்னாள் நக்சலைட்டுமான தடா பெரியசாமி கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,  பா.ரஞ்சித் நீங்க கூட திரைப்பட இயக்குனர் வேலையை பார்க்காமல் அரசியல் செய்றீங்க என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.  

இந்தியாவில் கருத்துச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அது ஆளுநராக இருந்தாலும் சரி அல்லது திரைப்பட இயக்குனராக இருந்தாலும் சரி.   ஒரு மாநிலத்தின் ஆளுநர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல், அவர் பேசவே கூடாது என்பது எத்தகைய ஜனநாயக உரிமை? இத்தகைய மனநிலையில் நீங்கள் எல்லாம் எப்படி தலித் விடுதலையை பற்றி பேசுகிறீர்கள்? 

பட்டியல் சமுதாய மக்களின் பஞ்சமி நிலம் மீட்கப்படாமல் இருப்பதை பற்றி என்றைக்காவது நீங்கள் வாய்
திறந்ததுண்டா?   கடந்த நிதியாண்டில்  16,442 கோடி மத்திய அரசாங்கம் ஒதுக்கியதில் 10,466 கோடி ரூபாய் பட்டியல் சமுதாய நிதியை செலவு செய்யாமல் துரோகம் செய்திருக்கும் திமுக அரசை எதிர்த்து என்றைக்காவது கேள்வி எழுப்பியதுண்டா?

100 நாட்களைக் கடந்தும் வேங்கவயல் நீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டுபிடிக்காமல், சட்ட ஒழுங்கை பாதுகாக்காமல் பட்டியல் சமுதாயத்திற்கு அநீதி இழைத்து வரும் திமுக அரசை கண்டித்து வாய்  திறந்ததுண்டா? இது போன்ற மக்கள் பிரச்சனையில் கேள்வி எழுப்பாமல் ஆளுநருக்கு எதிராக திசைதிருப்பும் வேலையை தம்பி Paranjith Pa போன்றவர்கள் செய்வது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் தடா பெரியசாமி.