Jallikattu.. ஜனவரி 6ல்.. தச்சங்குறிச்சியில் 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.. காளைகள் ரெடி!

Su.tha Arivalagan
Dec 30, 2023,05:17 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டைக்கு அருகே உள்ள தச்சங்குறிச்சியில் 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

வருடா வருடம் அந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் நடைபெறும். அங்குள்ள தச்சங்குறிச்சி புனித ஆரோக்கிய விண்ணேற்பு அன்னை தேவாலயம் சார்பில் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி என்ற பெருமையும் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு உண்டு. அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தவுள்ளது தச்சங்குறிச்சி. இதுதொடர்பான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



ஜல்லிக்கட்டுப் போட்டியை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளைகள் புக்கிங், காளைகளை அடக்கவுள்ள வீரர்களின் பெயர் சேர்ப்பு உள்ளிட்டவை தொடங்கியுள்ளன.

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவற்காக விழாக் கமிட்டி அமைக்கப்பட்டு, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டிய அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.