2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.. ரெடியாகும் தச்சங்குறிச்சி.. இன்று டோக்கன் விநியோகம்!

Meenakshi
Jan 04, 2024,01:13 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான டோக்கன்கள் இன்று விநியோகிக்கப்படுகிறது.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை  இதோ வந்து விட்டது.. இன்னும் 10 நாட்கள்தான் இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை. 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டு தோறும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெறவுள்ளன.




அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போன்று தான் தச்சங்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் புதுக்கட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஆறாம் தேதி தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன. 


வாடிவாசல் புதுப்பிப்பு, பேரிகார்டு அமைப்பது, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் தொடந்து நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இந்த டோக்கனை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


https://pudukkottai.nic.in/jallikattu/  என்ற இணையதள  முகவரி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.