பிரதமர் நரேந்திர மோடி - எலான் மஸ்க் சந்திப்பு எதிரொலி.. இந்தியாவில் ஆளெடுக்கும் டெஸ்லா!

Su.tha Arivalagan
Feb 18, 2025,05:56 PM IST

டெல்லி:  பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கைச் சந்தித்துப் பேசிய நிலையில் தற்போது இந்தியாவிலிருந்து தனது நிறுவனத்திற்கு ஆளெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது டெஸ்லா நிறுவனம்.


இந்தியச் சந்தையில் டெஸ்லா களம் இறங்கக் காத்துள்ள நிலையில் தற்போது அதன் முன்னோட்டமாக இந்தியாவில் ஆளெடுக்கும் வேலையை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்புக்குப் பின்னர் வேகம் பிடித்துள்ளது.


வாடிக்கையாளர் சேவைப் பிரிவு உள்ளிட்ட 13 பிரிவுகளுக்கு இந்தியாவில் ஆளெடுக்கவுள்ளது டெஸ்லா. இதற்கான அறிவிப்பையும் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது.




அதில் இரு வேலைகளுக்கு மும்பை மற்றும் டெல்லியில் ஆளெடுக்கவுள்ளது. மற்ற அனைத்து வேலைகளையும் தனது மும்பை அலுவலகத்திற்கு அது தேர்வு செய்யவுள்ளது.


டெஸ்லாவின் இந்திய வருகை பல காலமாகவே இழுபறியாக உள்ளது. காரணம் இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் இந்தியா மட்டுமல்லாமல், தெற்காசியா பககமே வராமல் இருக்கிறது டெஸ்லா. இந்த நிலையில் தற்போது இந்தியா தனது வரி விதிப்பை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைத்துள்ளது. இது டெஸ்லாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.


ஆசிய நாடுகளில் சீனாதான் மின்னணு வாகனச் சந்தையில் கோலோச்சி வருகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பல படி மேலே இருக்கிறது சீனா. டெஸ்லா இந்தியச் சந்தைக்கு வந்தால் இந்த நிலை மாறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.