தமிழ்நாடு, புதுச்சேரியில்.. அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்!

Su.tha Arivalagan
Aug 07, 2023,01:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. மீண்டும் கோடை காலம் தொடங்கி விட்டதா என்று  அஞ்சும் அளவுக்கு வெயில் வெளுக்கிறது. காற்று குறைந்து விட்டது. மழையும் இல்லை. வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருப்பதால் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.



இந்த நிலையில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம்  அதாவது Heat Stress காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.



சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 38  டிகிரி செல்சியஸாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல் தெரிவித்துள்ளது.