தலிபான்களிடம் சிக்கிய ஆப்கானிஸ்தான் நிலை.. இந்தியாவுக்கு வேண்டாம்.. கே.சி.ஆர்.

Su.tha Arivalagan
Jan 14, 2023,12:31 PM IST
ஹைதராபாத்:  தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் சிக்கிக் கொண்டதைப் போல, இங்கும் சிலர் கையில் நமது நாடு சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.



கோத்தகுடம் என்ற நடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேசிஆர் பேசுகையில்,  பிரிவினைவாதிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்படுத்தி வைத்திருப்பது போல செய்து விடுவார்கள். இவர்களிடம் நாடு சிக்கிக் கொண்டால், முதலீடுகள் வராது, தொழிற்சாலைகள் வராது, வேலைவாய்ப்புகள் வராது, வளர்ச்சியும் இருக்காது.

மாநிலங்களுக்கு இடையிலான குடிநீர்ப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதிலும் அரசியல்செய்கிறது. நாடு முழுவதும் குடிநீருக்குப் பிரச்சினை உள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. நீர்ப்பாசன வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1.40 லட்சம் டிஎம்சி அளவுக்கு மழை பெய்கிறது. நம்மிடம் 4.10 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்தியாவில் நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் இல்லை,  மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்பது குறித்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

மத்தியில் திறமையற்ற அரசு இருப்பதே இதற்குக் காரணம். இருக்கின்ற ஆதாரங்களை கூட பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அரசு உள்ளது. 

2014ம் ஆண்டு மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியும் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்தன. தெலங்கானா பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டுகளில் சிறந்து விளங்குகிறது. தேசியஅளவில் இந்தியாவின் நிலை அனைவருக்கும் தெரியும். 

ஜனவரி 18ம் தேதி கம்மம் நகரில் பிரமாண்ட கூட்டம் நடைபெறவுள்ளது. பல்வேறு மாநில முதல்வர்கள் வருகிறார்கள்.  தேசியஅளவிலான பல்வேறு கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். இது நாட்டுக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான கூட்டமாகும் என்றார் அவர்.