யார்ரா நீ... காதலிக்கு ஐபோன் வாங்க அம்மா நகையை திருடிய 9ம் வகுப்பு மாணவன் கைது!

Meenakshi
Aug 10, 2024,12:14 PM IST

டெல்லி:   டெல்லியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது காதலிக்கு ஐ போன் வாங்குவதற்காக தனது தாயின் நகைகளை திருடி விற்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.


டெல்லி நஜாப்கர் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசாக ஐ போன் வாங்க முடிவு செய்துள்ளார். ஆனால் ஐ போன் வாங்கும் அளவிற்கு சிறுவனிடம் பணம் இல்லாத காரணத்தினால், தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். தாயும் பணம் தர மறுத்ததுடன் சிறுவனை கண்டித்துள்ளார்.இதனால் காதலியின் மீது உள்ள ஆசை காரணமாக தாய் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இருந்து, தனது தாயின் நகைகளை திருடியுள்ளார். அதன் பின்னர் அதனை அருகில் உள்ள கடையில் விற்று காதலிக்காக ஐ போன் வாங்கியுள்ளார்.




இந்நிலையில், தனது நகைகளை காணவில்லை  என்று தவித்த சிறுவனின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டிற்குள் வெளி ஆட்கள் யாரும் வராதது தெரிய வந்தது. இந்நிலையில், சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் ரூ.50,000த்திற்கு ஐ போன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறுவனிடம் விசாரணை நடத்தினர் போலீசார். அப்போது வீட்டில் இருந்து ஒரு ஜோடி கம்மல்கள்,ஒரு தங்க மோதிரம்,ஒரு செயினை திருடியாதாக ஒப்புக்கொண்டான் சிறுவன்.


வீட்டிற்கு தெரியாமல் நகைகளை எடுத்துச் சென்ற சிறுவன் வெவ்வேறு கடைகளில் நகைகளை விற்றுள்ளார். தந்தை இறந்த நிலையில், தாய் தனியாக இருந்து சிறுவனை காப்பாற்றி வருவது தெரிய வந்தது. சிறுவன் திருடி விற்ற கம்மல்கள், தங்க மோதிரம் மற்றும் செயின் மீட்கப்பட்ட நிலையில், நகையை அடகு வாங்கியவரும். சிறுவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.