புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு.. கடலை மிட்டாய் கொடுத்து வரவேற்ற.. தேவகோட்டை ஆசிரியர்கள்!

Manjula Devi
Jun 10, 2024,03:45 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில்  புதிதாக  சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து மாலை, ரோஜா பூ அணிவித்தும், கடலை மிட்டாய் வழங்கியும் வரவேற்றனர்.


நாம் பிறந்ததிலிருந்து பள்ளி பருவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் வரை பெற்றோர்களை பிரிந்து இருக்க மாட்டோம். அவர்களை விட்டு எங்கேயும் செல்லவும் மாட்டோம். அவர்கள் கைப்பிடித்துக் கொண்டே நடந்து அவர்கள் அரவணைப்பில் மட்டுமே இருந்து வாழ்ந்து வந்தோம். அப்படி இந்த அழகான  தருணம் என்றும் மறவாது. அடுத்து பள்ளிப் பருவ காலகட்டத்தில் பெற்றோரை பிரிந்து தனது அடுத்த அன்னையாக விளங்கும் ஆசிரியர்களுடன் இணைந்து  பள்ளி வாழ்க்கையில் பயணிப்போம்.




புத்தம் புதிதாக பள்ளிக்குச் செல்லும்போது எல்லாக் குழந்தைகளுக்கு ஒரு மிரட்சி இருக்கத்தான் செய்யும். பெற்றோர்களை பிரியும்போது, அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு நான் பள்ளிக்குப் போகமாட்டேன்.. நான் உன் கூட தான் இருப்பேன்.. என மழலை மாறாத அந்த குழந்தையின் குரலை கேட்ட அந்த தாயின் பரிதவிப்பை சொல்லவே வார்த்தைகள் இல்லை. ஆனாலும் சமாதானப்படுத்தி, சமரசம் செய்து  குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துச்  செல்வார்கள் பெற்றோர்.  கிட்டத்தட்ட நம்முடைய அத்தனை பேர் வாழ்விலும் இது போன்ற அழகான தருணம் அரங்கேறி இருக்கும். 




இந்த நினைவுகளை, வளர்ந்து பெரியாளாகும்போது எண்ணிப் பார்த்தால் நமக்கே வேடிக்கையாகதான் இருக்கும். அந்த அளவுக்கு குழந்தை பருவ பள்ளி என்பது மிகவும் அற்புதமானது. பொக்கிஷமானது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற காட்சிகளை பல ஊர்களில் பல பள்ளிகளில் காண முடிந்தது. ஆனால் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சர்ப்பிரைஸ் காத்திருந்தது. 


புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு ஆரத்தி எடுத்து, மாலை போட்டு, ரோஜா பூ, பூங்கொத்து, கடலைமிட்டாய், கொடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்து லட்சுமி, ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்வுகளில் ஏராளமான பெற்றோர்கள் உட்பட பொதுமக்களும் பங்கு பெற்றனர்.




இளம் வயது மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த ஆர்வத்துடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள மகிழ்ச்சியாக மலர்ந்த முகத்துடன் வருகை தந்தனர். முதல் வகுப்பு மாணவர்களில் சிலர் முதல் முறையாக பள்ளிக்கு வருவதால் சிறிது நேரம் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர். பிறகு ஆசிரியர்கள் அந்த குழந்தைகளை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியாக பள்ளி செயல்பாடுகளில் ஈடுபடுத்தினர்.