தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி.. டெல்லியில் சந்திரபாபு நாயுடு!

Meenakshi
Jun 05, 2024,02:02 PM IST

டெல்லி:   தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி. என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்காக டெல்லி வந்துள்ளார் நாயுடு.


ஆந்திராவில் கடந்த 13ம் தேதி ஒரே கட்டமாக 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் ஜனசேனை பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில்  தெலுங்கு தேசம் கூட்டணிக்கு மொத்தமாக 163 இடங்களை கிடைத்தன.12 தொகுதிகளில் மட்டுமே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றிபெற்று படுதோல்வியை சந்தித்தது. ஜெகன்மோகன் போட்டியிட்ட ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதியிலும் தேல்வியை தழுவியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி.




இந்நிலையில், ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் கூட்டணிக்கு வாக்களித்து அமோக வெற்றிபெற வைத்த மக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு  நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இதயம் கனிந்த நன்றிகள்.இந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய் வாய்ப்பளித்ததற்கு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான போரில் ஒற்றுமையாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், ஒன்றாக, நாங்கள் அதை மீண்டும் கட்டியெழுப்புவோம்.


வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக துணிச்சலுடன் போராடிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவே இந்த வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது நாயுடு டெல்லி வந்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி வந்துள்ளார். பாஜக தனிப் பெரும்பான்மை பலம் பெறத் தவறி விட்டதால், இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.