TCS ends hybrid work: எல்லோரும் கிளம்பி ஆபீஸுக்கு வாங்க.. ஆர்டர் போட்ட டிசிஎஸ்!
பெங்களூர்: இதுவரை ஒர்க் பிரம் ஹோம் மற்றும் ஆபீஸ் என கலவையான வேலை வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி வந்த டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை ரத்து செய்து விட்டது. இனிமேல் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு இருந்த உலகம் வேறு.. அதற்குப் பிறகு நாம் இப்போது பார்க்கும் உலகமே வேறு. கொரோனா வந்து உலகையே புரட்டிப் போட்டு விட்டது. அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பல நடைமுறைகள் இன்று வழக்கொழிந்து போய் விட்டன. புதிய இயல்புகளை உலகம் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டது.
அதில் ஒன்றுதான் ஒர்க் பிரம் ஹோம். கொரோனாவுக்கு முன்பு வரை ஒர்க் பிரம் ஹோம் என்றால் என்ன என்று கூட பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. ஆனால் கொரோனா வந்து ஒர்க் பிரம் ஹோம் என்பதை அத்தியாசத் தேவையில் ஒன்றாக மாற்றி விட்டது.
கொரோனா காலகட்டத்தில் பல நிறுவனங்கள் ஒர்க் பிரம் ஹோம் மோடுக்கு மாறின. குறிப்பாக ஐடி நிறுவனங்கள். அதன் பிறகு அது புதிய இயல்பாகி விட்டது. இன்று வரை ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் ஐடி நிறுவனங்கள் பலவற்றில் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நிறுவனமாக இதை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளன.
அந்த வரிசையில் இந்தியாவின் நம்பர் 1 ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் ஹைபிரிட் மாடல் வேலையை ரத்து செய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. தற்போது வாரம் 3 நாட்கள் அலுவலகத்திலும், பிற நாட்கள் வீட்டிலுமாக வேலை பார்க்க அது அனுமதி வருகிறது. அதை மாற்றி இனி வாரத்தின் 5 பணி நாட்களிலும் அலுவலகத்திலேயே வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.