தமிழகத்தை வறுத்தெடுக்கும் வெயில்.. இன்னும் ஒரு வாரம் நீடிக்குமாம்!

Su.tha Arivalagan
Aug 05, 2023,05:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் 2வது கோடை காலம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திடீரென சமீப நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. வெளியிலும் வெயில் கடுமையாக இருக்கிறது. இடையில் அடித்து வந்த ஆடிக் காற்றையும் இப்போது காணவில்லை. இதனால் மக்கள் மண்டை காய்ந்து போய்க் கிடக்கின்றனர்.

மழையும் தற்போது இல்லை. வறண்ட வானிலையே மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மீண்டும் ஒரு கோடைகாலம் வந்து விட்டதோ என்று குழம்பிப் போகும் அளவுக்கு வெயிலும், புழுக்கமும் அதிகமாகவே இருக்கிறது.



இந்த  நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 2வது கோடைகாலம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். சென்னையில் சராசரியாக 38 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடிக்கும். திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூரில் 39 டிகிரி அளவுக்கு போகும். மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடியில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வெளுத்தெடுக்கும்.

கேரளா பக்கமும் பெரிதாக மழை இல்லை என்று அவர் கூறியுள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெயில் மட்டுமே இருக்கிறது.. வெயிலைத் தவிர வேறு ஒன்றும்  தெரியவில்லை.