வெயிலுக்கு ஜில்லுனு குல்பி சாப்பிட்ட மாதிரி .. 4 நாட்களுக்கு செம்ம மழை.. என்ஜாய் மக்களே!

Manjula Devi
Apr 12, 2024,10:22 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகதனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார். 


கடந்த இரண்டு மாதங்களாக  தமிழ்நாட்டில் வறண்ட வானிலையும், வெயிலின் தாக்கமும் அதிகரித்தால் மக்கள் வெயிலை சமாளிக்க முடியாமல்  மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக குல்பி சாப்பிட்டா எப்படி இருக்கும். அது மாதிரி அடிக்கிற வெயில்ல மக்களை குளிர்விக்க தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யுமாம்.




தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாம்.


சென்னையைப் பொருத்தவரை, சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை  எனவும், ஆனால் வெப்பம் கட்டுக்குள் இருக்கும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15 ஆம் தேதி:


ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது  எனவும் தெரிவித்துள்ளார்.