பருவ மழை பிச்சுக் கட்டப் போகுது.. ஹில் ஸ்டேஷன்களுக்குப் போவதைத் தவிர்க்கவும். வெதர்மேன் அட்வைஸ்!

Su.tha Arivalagan
Jun 21, 2024,09:06 PM IST

சென்னை: தென் மேற்குப் பருவ மழை சீசனில் மிகப் பெரிய மழை வரும் நாட்களில் கொட்டப் போகிறது. எனவே பருவ மழை பெய்யும் பகுதிகளில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்குப் போவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடுவெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.


தென் மேற்குப் பருவ மழை தொடங்கி இதுவரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவிலும், தமிழ்நாட்டின் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதல் பெரிய மழை பெய்யப் போவதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


சீசனின் முதல் பெரிய மழை




இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்குப் பருவ மழை கேரளா, கர்நாடகா, நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரியின் வனப் பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பெய்யவுள்ளது. இதுதான் இந்த சீசனின் முதல் பெரிய மழையாக இருக்கும். சில இடங்களில் கன மழை இருக்கும் வாய்ப்புள்ளது.


ஜூன் 22, 23 மற்றும் 28, 29 ஆகிய நாட்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால், மூணாறு, இடுக்கி, வயநாடு, குடகு, சிக்மகளூர், ஷிமோகா, கூடலூர் - பந்தலூர் பகுதிகள், வால்பாறை, கேரளா, கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இந்த சீசனில் இப்போதுதான் முதல் முறையாக நல்ல மழைப் பொழிவை பார்க்கவுள்ளோம்.


ஈரம் நிறைந்த ஜூன்


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1996ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஜூன் மாதத்தில் அதிக அளவிலான மழைப் பொழிவு கிடைத்துள்ளது.  வழக்கம் போல இன்றும் கூட மாலை அல்லது இரவில் மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் இருக்காது. இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.