சட்டென்று மாறிய வானிலை.. தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Manjula Devi
Jun 06, 2024,10:17 AM IST

சென்னை:  தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இப்பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள்  ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நேற்று  பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடை மழை வெளுத்து வாங்கியது.சென்னை, மதுரை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென கரு மேகங்கள் ஒன்று திரண்டு,இருள் சூழ்ந்து காற்றுடன்,இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.




தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலிலேயே இருள் சூழ்ந்ததால் வாகனங்கள் ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். திடீரென பெய்த இந்த கோடையின் மழையால் தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாம். குறிப்பாக கர்நாடகாவில் ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.