மக்களே.. நேற்று ராத்திரி மழை நல்லாருந்துச்சா?.. 5 நாட்களுக்கு லேசா பெய்யுமாம்.. ஹேப்பி நியூஸ்!

Manjula Devi
Sep 24, 2024,06:02 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கோடை காலத்தை போலவே தற்போது  பரவலாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.அதே நேரத்தில் சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 


அதன்படி தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சென்னை மணலியில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 




ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழையும், திருநின்றவூர், மதுரவாயல், அம்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 6.5 சென்டிமீட்டர் மழையும் திருவேற்காட்டில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் தென் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.


இதற்கிடையே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. 


இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது .



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்