மக்களே உஷார்...தமிழகத்தில் இன்றும் மழை இருக்காம்

Aadmika
Aug 29, 2023,02:28 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று இரவு வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று எச்சரித்திருந்தது. இதே போல் சில மாவட்டங்களில் இரவு வரை நன்கு மழை பெய்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் இன்று அதிகாலை பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. 



இந்நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களக்கு மழை தொடரலாம் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.