எந்த இடத்திலும் முன்னிலை இல்லை.. அண்ணாமலைக்கு கோவையில் பின்னடைவு.. வாக்கு சதவீதம் முன்னேற்றம்!

Meenakshi
Jun 04, 2024,01:58 PM IST

கோவை:  கோவை மக்களவை தொகுதியில் ஆரம்பத்தில் இருந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பின்னடைவிலேயே இருந்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். அதேசமயம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் சற்று உயர்ந்துள்ளது.


2024 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற வருகிறது. கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், பாஜக சார்பில் அண்ணாமலையும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதனும் போட்டியிடுகின்றனர். 




தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது அதில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.  பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்து வருகிறார். 2வது இடத்தில் அவர் இருக்கிறார். 3வது இடத்தில் அதிமுக உள்ளது.  தமிழக பாஜக தலைவராக  அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தல் இதுவாகும். பாஜக தலைமை அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. பல இடங்களில் மோடியும் பறந்து பறந்து வந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். எப்படியாவது தமிழகத்தில் கணிசமான இடங்களிலாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று பாஜக தலைமையும், அண்ணாமலையும் பிரச்சாரம் செய்து வந்தனர். 


அண்ணாமலைக்கும், அதிமுக கட்சியினர்களுக்கு மோதல் ஏற்பட்டபோது கூட பாஜக தலைமை அண்ணாமலையை கண்டிக்கும் என்று பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்து வந்தனர். ஆனால், பாஜக தலைமையோ அப்படி செய்யாமல் அண்ணாமலையின் பக்கமே தொடர்ந்து நின்றது. எப்படியாவது தனித்து போட்டியிட்டு வெற்றி அடைந்து விடலாம் என்ற பாஜகவின் கனவு தற்போது பொய்த்து போயுள்ளது. 


இந்நிலையில், அதிமுகவினர் தற்போது தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. பாஜகவின் தேர்தல் முடிவுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அத்துடன், அண்ணாமலையையும் நோஸ்கட் செய்து வந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம், அதிமுகவை விட அதிக வாக்குகளுடன் அண்ணாமலை 2வது இடத்தைப் பிடித்துள்ளதால் நிலைமை சற்று கலவரமாகாமல் உள்ளது.