முதல்வரின் புதுமைப்பெண் திட்டத்தால்.. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழ்நாடு முதலிடம்.. தமிழக அரசு

Manjula Devi
May 27, 2024,06:16 PM IST

சென்னை:  முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டத்தால் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 49 விழுக்காட்டுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தபின் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெண்கள் அதிகமாக அரசு கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதற்காகவும், கல்லூரி மாணவிகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் நான் முதல்வன், புதுமைப்பெண், தொழில் திறன் மேம்பாட்டு, ஆராய்ச்சி மானிய திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 




இந்தியாவில் அரசு பல்கலைக்கழகங்கள் 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் மிகவும் புகழ்பெற்ற 100 நிறுவனங்களில் 31 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.


அதன்படி மூவலூர் ராமிர்தம் அம்மையார் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 1000 வழங்குவதன் மூலம்

2.73 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி சலுகை கட்டணமாக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதில் பயிற்சி பெற்ற 1.84 லட்சம் இளைஞர்களில் 1.19 லட்சம் இளைஞர்கள்  வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இது தவிர அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்காக கல்வி, விடுதி கட்டணங்களை செலுத்த 213.37 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 


இந்த நிலையில் உயர்கல்வியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக சிறந்து விளங்குகிறது. குறிப்பாக உயர் கல்வி சேர்க்கையில் 49 விழுக்காடுடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை 34 சதவீத உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.