ரூ. 730 கோடி குத்தகை பாக்கி... 160 ஏக்கர் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை மூடி.. 4 கேட்களுக்கும் சீல்!

Meenakshi
Sep 09, 2024,06:21 PM IST

சென்னை:  சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு ரூ.730 கோடி குத்தகை வாடகை பாக்கி செலுத்தாதது காரணமாக நான்கு வாயிலகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


கடந்த 1945ம் ஆண்டு முதல் சென்னை  கிண்டில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 160 ஏக்கர் நிலத்தை அரசு குத்தகை அடிப்படையில் வழங்கியது. 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது, வரும் 2044ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. குத்தகை தொகையாக ஆண்டுக்கு ரூ.614 .13 காசுகள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 1970ம் ஆண்டு  வாடகையை உயர்த்துவது தொடர்பாக கிண்டி வட்டாட்சியர் அலுவலகம் நோட்டீஸ் பிறப்பித்தது. இதற்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் ஓப்பந்தத்தில் எதுவும் சேர்க்கப்படவில்லை என கூறியது.




இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், 1970 முதல் 2004ம் ஆண்டு வரையிலான ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 குத்தகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்த பொது நலனும் இல்லை. இந்த நிலத்தை  மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்திற்குள்  தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும் தவறும்  பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், வாடகை பாக்கியை செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலை கிண்டி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் 160 ஏக்கர் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்தனர். அத்துடன் அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்