தமிழ்நாடு அரசு தீவிரம்.. வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு வேகம் பிடிக்கிறது!

Su.tha Arivalagan
Mar 07, 2023,03:03 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த தகவல் சேகரிப்பு வேகம் பிடித்துள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் கூறி பீகார், உத்தரப் பிரதேசத்தில் சில விஷமிகள் வதந்தி பரப்பி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தினர். இரு மாநில மக்களுக்கு இடையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான இந்த செயல் நாட்டு மக்களை அதிர வைத்து விட்டது.



இது முற்றிலும் வதந்தி என்பதை உடனடியாக தமிழ்நாடு அரசும், பீகார் அரசும் தெளிவுபடுத்தி விட்டன. பேக்ட் செக் பத்திரிகையாளர் முகம்மது ஜூபைரும் இதுதொடர்பாக தொடர் டிவீட் போட்டு, வதந்தி பரப்பியவர்களை அம்பலப்படுத்தினார். இதனால் இந்த விவகாரம் தணிந்து வருகிறது.  மேலும் பீகாரிலிருந்து அரசு அதிகாரிகள் குழுவும், அரசியல்வாதியான சிராக் பாஸ்வானும் வந்து பார்த்துச் சென்றனர். அவர்களும் தமிழ்நாடு அரசுன் நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தனர். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரம் சேகரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் தகவல் சேகரிக்கும் பணி வேகம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 லட்சம் பிற மாநிலத் தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் குறித்த டேட்டா பேஸ் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பிற மாநிலத்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருக்கும் உரிய பாதுகாப்பு தரப்படுகிறது. அதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது.  பீகாரிலிருந்து வந்த 5 உறுப்பினர் குழு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில்தான் அதிக அளவிலான பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு கலெக்டர்களே நேரடியாக கணக்கெடுக்கும் பணியை கண்காணித்து வருகின்றனர் என்றார் கணேசன்.