மண்ட பத்ரம்..தமிழ்நாட்டில் வெயில் ஆரம்பம்.. இன்றும், நாளையும்..2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக வட தமிழக பகுதிகளான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவி வருகிறது. அநேகமான இடங்களில் பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் வெயில் அதிகரித்து 32 டிகிரி முதல் 33 டிகிரி வரை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவி கூடும்.
அதேபோல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
20 மற்றும் 21ஆம் தேதி களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் வேலையில் பொதுவாக லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.