டெல்டாவிலேயே முதல் முறையாக.. தஞ்சாவூரில் மினி டைடல் பூங்கா.. சேலத்திலும் புது வளாகம் திறப்பு!

Meenakshi
Sep 23, 2024,06:15 PM IST

சென்னை:   தஞ்சை மற்றும் சேலம் பகுதிகளில் புதிதாக ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.


சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம் மற்றும் ரூ.17.04 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்களையும் முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.




தொழில்துறை சார்பில் தமிழகத்தில் சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூபாய் 30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, அனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடடில் பூங்காக்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.


ரூ.36.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டங்களையும் திறந்து வைத்தார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 110 பேருந்து பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.


அதனைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 பேரில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே ஆர் பெரிய கருப்பன், அர சக்கரபாணி, சிவ.வீ.மெய்ய நாதன், மதிவேந்தன் டிஆர்பி ராஜா தலைமைச் செயலாளர் நான் முருகானந்தம் மற்றும் துணைச் செயலாளர் பங்கேற்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்