தமிழக அமைச்சரவை மாற்றம்...அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கலாம் என தகவல்

Manjula Devi
Sep 27, 2024,10:58 AM IST

சென்னை:   அமைச்சரவையில் மாற்றம் வருமா என தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின்  சென்றிருந்தார். அப்போது அமைச்சரவையில் மாற்றம் வருமா என முதல்வரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர்,அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் .ஏமாற்றம் இருக்காது என சூசகமாக தெரிவித்து இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. 




இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார். பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து அவர் பல கட்டங்களாக ஜாமீன் கேட்டு மேல்முறையீடு  செய்து வந்த நிலையில் நேற்று அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் செந்தில் பாலாஜி விரைவில் அமைச்சராக பதவி ஏற்பார் என கூறப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்தப் பதவி தற்போது தங்கம் தென்னரசு வசம் உள்ளது. 


இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியும், இரண்டு அமைச்சர்கள் நீட்டப்பட்டு புதிதாக இரண்டு அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‌


அதேபோல் செந்தில் பாலாஜி  வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் அவருக்கே ஒதுக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கே மின்சாரத்துறை பதவி வழங்கப்பட  உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்