அரசியலில் இருக்கணுமா?... என்ற எண்ணம் தோன்றுகிறது.. அண்ணாமலை பரபர பேச்சு

Meenakshi
Jul 22, 2024,05:53 PM IST

கோவை: அரசியலில் இருக்கணுமா?... என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. ஒரு சாதாரண மனிதனைப்போல எதையும் பேச முடியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிள்ளார்.


கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை பேசுகையில், இதற்கு முன்னாடி நான் ஒரு போலீஸ் ஆபிசர். நான் போலீஸ் ஆபிசராக இருக்கும் போது, ஒரு டிசிசன் எடுக்கும் போது இது சரி, இது சரியில்லை. 50 சதவீதம் பேர் உங்களை பாராட்டுவார்கள். 50 சதவீதம் பேர் உங்களை திட்டுவார்கள். அவ்வளவு தான். எனக்கு 40 வயதாகிறது. 


37 வயது வரை டிசிசன் மேக்கிங் எனக்கு சிம்பிளாகத் தான் இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கு ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். 




அரசியல் இருக்கணுமா என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதனைப் போல எதையும் பேச முடியவில்லை செய்ய முடியவில்லை. சரி தவறு என எதையும் கூற முடியவில்லை. ஒருத்தர் நம்மளை திட்டுனா கூட பொறுமையாக இருக்கனும். ஒவ்வொருத்தருக்கும் நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் காலை முதல் மாலை வரை பதில் மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு ஒரு பத்திரிக்கையில் வருது  என்றால், அதையும் படிக்கனும், அதற்கும் ரியாக்ட் பண்ணக்கூடாது. அமைதியாக தான் இருக்க வேண்டும்.இது தான் அரசியலுக்கு வருவதற்காக உங்களுக்கு வைக்கக் கூடிய பரீட்சை.


பாஜக தேசத்தை ஒருமைப்படுத்தும் கட்சி. எந்த கட்சிக்கும் இல்லாத ஆன்மா பாஜகவிற்கு உள்ளது.இந்த கட்சியில் சேர்ந்த தலைவர்கள் எதையாவது ஒன்றை இழந்து தான் இருப்பார்கள். தன்னுடைய செல்வத்தையும், நிம்மதியையும் இழந்து இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்  என்று நினைக்கக் கூடிய அன்பர்கள் இந்த  பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள்.


பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் அவசியம். பாஜகவை பலர் குறை சொல்வார்கள். அதை எல்லாம் கடந்து செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவின் வேரை நாம் வலுவாக்கி கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலில் எட்டாயிரம் பூத்துகளில் பாஜக முதல் இடம் பெற்று இருக்கிறது. வேர் வலுவாகிறது.கோவையில் பாஜக தோல்வி அடைந்தது என்று பார்க்காதீர்கள். வெற்றி கொஞ்சம் தள்ளி போய் இருக்கிறது என்று பாருங்கள் என கூறியுள்ளார்.