டிஎம்எஸின் கொள்ளுபேத்தியை கையில் வாங்கி.. தானும் குழந்தையாக மாறிய.. டாக்டர் தமிழிசை!

Manjula Devi
Apr 12, 2024,02:42 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை மயிலாப்பூரில் வாக்கு சேகரித்த போது மறைந்த பின்னணி பாடகர், டிஎம் சௌந்தரராஜனின் கொள்ளு பேத்தியை கையில் வாங்கிக் கொண்டு தானும் குழந்தையாகவே மாறி கொஞ்சி மகிழ்ந்தார்.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசியக் கட்சிகள் தமிழகத்தை நோக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும்ஆளும் கட்சியான பாஜகவில் பல்வேறு பிரபலங்கள் இணைந்து தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.




சமீபத்தில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு  பாஜகவில் இணைந்தார். தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார். தென் சென்னைக்கு உட்பட்ட மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரிக்க வாகன பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த வழியில் இருந்த பிரபல பாடகர் டிஎம்எஸ் சௌந்தரராஜன் வீட்டை கடந்த போது அவரது கொள்ளு பேத்தியான ஸ்ரேயாவை கையில் வாங்கிக் கொண்டு அந்த குழந்தையைப் போலவே அவரும்  சிரித்து மகிழ்ந்தார். 


பின்னர்  குழந்தையின் கையில் தாமரை மலரை கொடுத்து மகிழ்ச்சிக்கு உச்சத்திற்கே சென்றார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை தாமரை மலரை ஆட்ட அவரும் சிரித்துக் கொண்டே பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.


குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு தானும் ஒரு குழந்தையாக மாறி சிரித்தபடி வாக்கு சேகரித்த டாக்டர் தமிழிசையை கண்டு பாஜக தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். பின்னர் குழந்தையை அவரது குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு தமிழிசை தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார்.