"தமிழர்கள் அங்கீகரிக்கவில்லை"..  தூத்துக்குடி தோல்வியை மனதில் வைத்து .. தமிழிசை ஆதங்கம்!

Su.tha Arivalagan
Feb 20, 2023,01:46 PM IST
சென்னை:  தமிழர்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை என்று  தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் கூறியிருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றதை அவர் மனதில் வைத்து இப்படிப் பேசியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், தமிழர்கள் எங்களை அங்கீகரிக்கத் தவறி விட்டனர். மத்திய அரசுதான் எங்களது திறமையை வீணடிக்காமல் அடையாளம் கண்டு, அங்கீகரித்து ஆளுநர் பதவியைக் கொடுத்துள்ளது என்று கூறினார்.

அவர் "எங்களை" என்று கூறியது தற்போது ஆளுநர்களாக உள்ள முன்னாள் பாஜக தலைவர்களான சி.பி. ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோரையும், தன்னையும் சேர்த்துத்தான் என்று கருதப்படுகிறது.  தமிழர்கள் தங்களை அங்கீகரிக்கவில்லை என்று எதை நினைத்து தமிழிசை சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், தேர்தல் தோல்வியை மனதில் கொண்டே அவர் இவ்வாறு கூறியிருப்பதாக கருதப்படுகிறது.


திரிஷா மாதிரி.. எப்போதும் யூத் லுக்குடன் இருக்கணுமா.. இந்த உணவுகளை டிரை பண்ணுங்க!


கடந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை போட்டியிட்டார். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். மூன்று பேருமே தேர்தலில் தோல்வியைச் சந்தித்தனர். 

தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழி, தமிழிசைய தோற்கடித்தார். அப்போது பாஜக தலைவராக இருந்தார் தமிழிசை. தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஆளுநராக தெலங்கானாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவருக்கு புதுச்சேரியும் கூடுதலாக கொடுக்கப்பட்டது.

கோவையில் தோல்வியுற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக அனுப்பப்பட்டுள்ளார். மிஞ்சியிருப்பது பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே. அவருக்கும் விரைவில் ஆளுநர் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பொன். ராதாகிருஷ்ணன் சமீப காலமாக அமைதியாக இருந்து வருகிறார். தீவிரமான செயல்பாடுகளிலிருந்து விலகியும் உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் எங்களை தமிழர்கள் அங்கீகரிக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழிசை.. தமிழர்கள் மீதான மொத்தமான குற்றச்சாட்டாகவும் இதைப் பார்க்கலாம் என்பதால் தமிழிசையின் இந்தப் பேச்சு சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.