"பொங்கலோ...பொங்கல்"... இனிமையையும் வளமையையும் பொங்கி பெருக வைக்கும் தைப் பொங்கல்!

Aadmika
Jan 15, 2024,08:08 AM IST

சென்னை : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்ட பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பண்டிகை என்றும், 2வது நாள் தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் என்றும், 3வது நாள் மாட்டுப் பொங்கல் என்றும், 4வது நாளை காணும் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். தை மாதத்தின் முதல் நாளை நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.


சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை வடக்கு நோக்கு துவங்கும் நாளே தைப் பொங்கல் தினமாகும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த நாளில் சூரிய பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுவார். இதனால் இந்த நாள் நாட்டின் சில பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. உழவுக்கும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.




ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, புதிய ஆடைகளை உடுத்தி, வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, வசந்த காலத்தை வரவேற்க தயாராவார்கள். புதிய பானையில், புதிதாக விளைந்த பச்சரியில்  பால், பருப்பு, வெல்லம், நெய் சேர்த்து சர்க்கரை பொங்கல், கரும்பு ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். பால் பொங்கி வரும் போது பொங்கலோ...பொங்கல் என மக்கள் சங்க நாதம் எழுப்பியும், குலவை போட்டும் வழிபடுவார்கள். 


உலகத்திற்கு ஆதாரமாக விளங்கும் உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரிய உடையறிந்து, தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், ஆட்டம்-பாட்டம் என பொங்கல் விழாவை உற்சாகமாக மக்கள் கொண்டாடுவது வழக்கம்.