விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?

Aadmika
Oct 24, 2024,04:49 PM IST

சென்னை : நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை சமீபத்தில் துவக்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒரு முறை தள்ளி வைக்கப்பட்டு, தற்போது அக்டோபர் 27ம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.  இந்த தேதியில்தான் பல மேட்டர்கள் அடங்கியுள்ளன.


அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு துவங்கி, இரண்டு மணி நேரம் இந்த மாநாடு நடைபெற உள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள், தவெக கட்சி தொண்டர்கள், தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் இந்த மாநாட்டையும், மாநாட்டில் விஜய் பேச போகும் பேச்சையும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாநாட்டில் விஜய் பேச போகும் பேச்சு இருக்கட்டும். விஜய் தன்னுடைய மாநாட்டை நடத்த தேர்வு செய்துள்ள தேதியே சுவாரஸ்யமானது தான்.


ஆன்மிகத்தில் முக்கியமான 9




விஜய் தன்னுடைய மாநாட்டை நடத்துவதற்காக முதலில் தேர்வு செய்த தேதி செப்டம்பர் 22. அதாவது ஒன்பதாவது மாதம். ஒன்பது என்பது விஐபி நம்பர். ஆன்மிகம், ஜோதிடம் ரீதியாக பார்த்தாலும் ஒன்பது என்ற எண்ணுக்கு பவர் அதிகம். இது ஒரு புறம் இருக்கட்டும். செப்டம்பர் 22ம் தேதி முருகனுக்குரிய சஷ்டி, கிருத்திகை இரண்டும் இணைந்த அபூர்வமான, அற்புதமான நாள். முருகன், தலைமைத்துவத்திற்கான கடவுள்.  அசுரர்களுக்கு எதிரான போரில் தேவர்கள் படையின் தலைவனாக இருந்தவர் முருகன்.  அந்த நாளில் மாநாடு நடத்துவதற்கு போலீஸ் அனுமதி கொடுத்தாலும், நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது என கூறி, மாநாட்டு தேதியை மாற்றி வைத்தார்கள்.


கூட்டுத் தொகை 9




தற்போதும் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கும் தேதி அக்டோபர் 27. இதன் கூட்டுத் தொகையும் ஒன்பது தான். அது மட்டுமல்ல மாநாட்டு தேதியான 27.10.2024, இவற்றை கூட்டி ஒற்றை எண்ணாக மாற்றினால் 9.1.8 என்று வரும். இவற்றை மொத்தமாக கூட்டி மாற்றினாலும் (9+1+8=18; 1+8=9) வரும் எண் 9 தான்.  எண்களில் மிகவும் விசேஷமான எண்ணாக சொல்லப்படுவது ஒன்பது. இந்தியர்கள் மட்டுமல்ல சீனர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்களும் மிக முக்கியமான எண்ணாக கருதுவது ஒன்பது. இந்த எண்ணிற்கு நீண்ட ஆயுளை குறிக்கக் கூடியது என்ற சிறப்பும் உண்டு.


அரச பதவிக்குரிய நாள் ஞாயிறு




ஒன்பது என்ற எண்ணை வடமொழியில் நவம் என்பார்கள். நவம் என்றால் புதுமை என்பதை குறிப்பதாகும். ஒரு பெண்ணில் கருவில் இருக்கும் குழந்தை முழுமை பெறுவது ஒன்பதாவது மாதத்தில் தான். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் விஜய் தன்னுடைய மாநாட்டை நடத்துவதற்காக தேர்வு செய்த கிழமை ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குரியது. சூரியன் அரச பதவி, தலைமை பதவிக்கு காரணமான கிரகம். 


ஏகாதசி தினம்




மற்றொரு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் அக்டோபர் 27ம் தேதி ஏகாதசி நாளாகும். விஜய் மாநாட்டை துவக்குவதற்காக தேர்வு செய்திருக்கும் 4 மணிக்கு தான் பூரம் நட்சத்திரம் துவங்குகிறது. இதுவும் தலைமை பண்பிற்குரிய நட்சத்திரம் தான். அது மட்டுமல்ல பூரம் நட்சத்திற்குரிய அதிபதி சுக்கிரன். வாழ்க்கையில் ஒருவர் உயர்ந்த நிலைக்கு சென்றால், சுக்கிர திசை நடக்கிறது என்பார்கள். எந்த தேதி, எந்த நேரத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தில் அடிக்கல்லை அமைத்தால் உச்சத்திற்கு செல்லலாம் என்பதை துல்லியமாக கணித்து தான் விஜய் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்