தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!

Meenakshi
Oct 24, 2024,04:38 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் போது  பாதுகாப்பணியில் மட்டும் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். ஒரு அரசில் தலைவராக வருகின்ற 27ம் தேதி உருவெடுக்க உள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வருகின்ற 27ம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த மாநாட்டில் தான் தவெக தலைவர் விஜய் தனது கட்சி குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிடவுள்ளார். தனது கொள்கைகள், கட்சிக் கொடி குறித்த விளக்கம், தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல முக்கிய கருத்துக்களை அவர் பேசவுள்ளார். 2026ல் தான் என்ன செய்யப்போகிறேன் என்பதையும் அவர் முதல் முறையாக சொல்லவுள்ளதால், எதிர்பார்ப்பு அதீதமாக அதிகரித்துள்ளது.


விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை தனது கட்சியின் பணிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நேர்த்தியாக செய்து வருகிறார். அதே போல இந்த மாநாட்டிலும் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த மாநாட்டில் கூடப் போகும் கூட்டம் பிரமாண்டமாக இருக்கும் என்று பலமாக எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே தனது கட்சித் தொண்டர்களுக்கு இதுதொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை விஜய் வழங்கியுள்ளார். அதேசமயம்,  கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று விஜய் விடுத்த வேண்டுகோள் அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.


இதனிடையே மாநாட்டுத் திடலில், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், சட்டமேதை அம்பேத்கர் என்ற அடைமொழிகளுடன் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படங்களுக்கு நடுவில் விஜய் நிற்கும் கட் அவுட்டும் இடம்பெற்றுள்ளது. மேலும் வீரமங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர்களின் கட் அவுட்டுகளும் இடம் பெறும் பணிகளும் நடந்து வருகின்றன. 


இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம்  நடந்து விட்டால் அது காவல்துறைக்கு கெட்ட பெயராகி விடும் என்பதால் காவல்துறையும் முன்கூட்டியே பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்