"இலக்கு 2026தான்".. லோக்சபா தேர்தலில் போட்டியில்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை.. விஜய்  அதிரடி!

Su.tha Arivalagan
Feb 02, 2024,06:19 PM IST

சென்னை:  நடிகர் விஜய் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார்.


விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக 3 பக்கம் கொண்ட விரிவான அறிக்கையையும் விஜய் வெளியிட்டுள்ளார்.




விஜய் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:


- வள்ளுவர் வாக்கின்படி நடக்கப் போவதாக விஜய் அறிவிப்பு.


- கையில் இருக்கும் படங்களை முடித்து விட்டு முழுமையான அரசியலில் ஈடுபடவுள்ளார் விஜய்.


- லோக்சபா தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடாது. வேறு யாருக்கும் ஆதரவும் அளிக்காது.


- 2026 சட்டசபைத் தேர்தலில் முழுமையாக போட்டியிட விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முடிவு.


- இடைப்பட்ட காலத்திற்குள் தனது ரசிகர்களை அரசியல் தொண்டர்களாக மாற்றும் பணியில் விஜய் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுவார்கள்.


இனி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:




விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் நிவாரண உதவிகளையும் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் முழுமையான சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டுமே இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. 


தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒரு புறம் என்றால் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவு வாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்நலமற்ற வெளிப்படையான சாதி மத பேதமற்ற தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழல் அற்ற நேரம் திறமையான நிர்வாகத்திற்கு வழி வகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


மிக முக்கியமாக அத்தகைய அரசியல் நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்த இந்த மண்ணுக்கேற்ற பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவக் கொள்கை பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும் அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.


தாய் தந்தைக்கு அடுத்து என் தமிழ் மக்கள்




இந்நிலையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர் புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். எண்ணித்துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக 25 1 2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் தலைமைச் செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட விதிகள் முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொது குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பது தான் நமது இலக்கு.


தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ் நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் கொடி சின்னம் மற்றும் செயல் திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும். இடைப்பட்ட காலத்தில் எமது கட்சியின் தொண்டர்களை அரசியல் மையப்படுத்தி அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டு வரும் பணிகளும் கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.


தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போதைய எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவது இல்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆழமாக இறங்கப் போகிறேன்




இறுதியாக என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களை படித்து நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். 


எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளைக் கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்.