தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி.. கவனச் சிதறலால் நடந்த தவறு.. மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

Su.tha Arivalagan
Oct 18, 2024,06:55 PM IST

சென்னை: டிடி தமிழ் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி செய்தமைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது டிடி தமிழ் நிறுவனம்.


சென்னை தொலைக்காட்சியான டிடி தமிழ் நிறுவனத்தில் இன்று இந்தி மாத நிறைவு விழா நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 3வது வரியை முழுமையாக பாடாமல்  விட்டு விட்டு அடுத்த வரியைப் பாடியுள்ளனர் பாடலைப் பாடியவர்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் தமிழிசையும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிடி தமிழ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:




இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னையின் பொன் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பித்தார்.  விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, தவறுதலாக ஒரு வரி விடுபட்டு விட்டது. கவனச் சிதறல் காரணமாக ஏற்பட்ட தவறு இது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கோரிக் கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடல் பாடியவர்களிடம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்